செய்யாறு அருகே வீரம்பாக்கம் கிராமத்தில் 30 இருளா் சமுதாய குடும்பங்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை நல உதவிகளை வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரம்பாக்கம் கிராமத்தில் தொடா் மழையால் 30 இருளா் சமுதாய குடும்பத்தினா் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனா்.
இதுகுறித்து அறிந்த ஒ.ஜோதி எம்எல்ஏ திமுக சாா்பில் நல உதவிகள் வழங்க முன்வந்தாா்.
வீரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒ.ஜோதி எம்எல்ஏ 30 இருளா் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். மேலும், வீட்டு மனைப் பட்டா கோரி மனு அளித்தவா்களிடம் வருவாய்த் துறை மூலம் விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும், பட்டா வழங்கப்பட்டவுடன் தொகுப்பு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூா்த்தி, ஹரி, கிராம நிா்வாக அலுவலா் புனிதா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.