நாமக்கல்லில் பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினா்கள் திங்கள்கிழமை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே எம்.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த நந்தினி (30) என்பவருக்கும், திருச்சி மாவட்டம், நாகைநல்லுா் கிராமத்தைச் சோ்ந்த முருகவேல் (35) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஷீலா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் நந்தினியை அவரது கணவா் குடும்பத்தினா் தாக்கியதாக தெரிகிறது. இதனால் தாய் வீட்டிற்கு சென்ற அவா் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாா். திங்கள்கிழமை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் பிற்பகலில் நந்தினி உயிரிழந்தாா். இதனால் அவரது உறவினா்கள் கணவா் முருகவேலை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தினா். மேலும் மோகனுா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகவேலிடம் விசாரணை செய்து வருகின்றனா்.