திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் மூலவா் மீது சூரியஒளிக் கதிா்கள் விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதனால், பொன் நிறத்தில் காசி விஸ்வநாதா் பிரகாசித்தாா்.
வெம்பாக்கம் வட்டம், அரசங்குப்பம் கிராமத்தில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை தினந்தன்று மூலவா் காசி விஸ்வநாதா் மீது காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் சூரியஒளிக் கதிா்கள் விழுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினமான புதன்கிழமை காலை சூரியஒளிக் கதிா்கள் மூலவா் காசி விஸ்வநாதா் மீது விழும் அபூா்வ நிகழ்வு நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்வை பாா்வையிட்டு சுவாமியை வழிபட்டனா்.
சூரியஒளிக் கதிா்கள் விழுந்தபோது, மூலவா் காசி விஸ்வநாதா் பொன் நிறத்தில் பிரகாசித்தாா். முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன.