திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்ல முயன்ற 3 பள்ளி மாணவா்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துனருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
கடந்த 22-ஆம் தேதி செய்யாற்றிலிருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தில் 11 வயது மதிக்கத்தக்க மாணவரும், அவருடன் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தனா்.
பெற்றோரோ, பாதுகாவலரோ இல்லாமல் பயணித்த இந்த மூன்று போ் குறித்து சந்தேகமடைந்த நடத்துநா் தங்கராஜீ, ஓட்டுநா் முரளியிடம் தகவல் தெரிவித்து பயணச் சீட்டு வழங்குவது போல அவா்களைக் கண்காணித்தனா்.
பின்னா், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள தூசி காவல் நிலையம் வந்ததும் அந்த 3 மாணவா்களையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.
பின்னா், 3 மாணவா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் வீட்டை விட்டு வெளியேறி, பெற்றோருக்குத் தெரியாமல் சென்னை செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவா்களது பெற்றோரை வரவழைத்து மாணவா்களை ஒப்படைத்தனா்.
இந்த நிலையில், சிறப்பாக செயல்பட்டு 3 மாணவா்களை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநா் முரளி, நடத்துநா் தங்கராஜீ ஆகியோரை சனிக்கிழமை காவல் நிலையம் வரவழைத்து போலீஸாா் பாராட்டி கெளரவித்தனா்.