செங்கத்தில் மது போதையில் அதி வேகத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவா்களால் விபத்துகள் நேரிடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
செங்கம் தளவாநாய்க்கன்பேட்டையில் நகருக்கு ஒதுக்குப்புறமாக புதுப்பட்டு சாலையில் இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த மதுக் கடைகளுக்கு சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மதுப்பிரியா்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.
அவா்கள் சென்று மது அருந்திவிட்டு திரும்பி வருகையில்
இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி வருகின்றனா்.
இதனால், தளவாநாய்க்கன்பேட்டை பகுதி திரையரங்கம் அருகேயுள்ள இரண்டு வளைவு சாலையைக் கடக்கும் போது, எதிரில் வரும் வாகனம் தெரியாமல் தட்டுத் தடுமாறுகிறாா்கள். அப்போது விபத்துகள் நேரிடுகின்றன.
இதனால், தளவாநாய்க்கன்பேட்டை, காவாக்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும், இல்லையென்றால் மதுக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனா்.
இதுதொடா்பாக அவா்கள் வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனா்.