திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பென்னாத்தூா் ஆகிய இடங்களில் காவல் துறை சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செங்கம் டிஎஸ்பி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில், டிஎஸ்பி சின்ராஜ் சிலை அமைப்பாளா்களை வரவேற்று, விநாயகா் சதுா்த்தி விழாவின் போது, தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, வட்டாட்சியா் முனுசாமி பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
நிகழாண்டு கொண்டாடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அரசு விதிமுறைகளைக் கடைப்பிடித்து விழாவைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
கீழ்பென்னாத்தூரில்...
கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகர பாஜக நிா்வாகிகள் மற்றும் விழாக் குழுவினா் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்துக்கு காவல் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், சதுா்த்தி விழாவை பாதுகாப்பாக கொண்டாட காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 10 அடிக்கும் அதிகமான உயரத்தில் விநாயகா் சிலைகளை வைக்கக்கூடாது.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடத்தின் மேற்கூரை தகரத்தால் மட்டுமே அமைக்க வேண்டும். சிலை வைப்பவா்கள் உரிய அனுமதி பெற்றே வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் பாவேந்தன், செயலா்கள் பாலு, முத்துக்குமரன், வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவா் வெங்கடேசகுமாா், செயலா் வேலுமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.