ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத்திடம், போளூா் பேரூராட்சி மன்றத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சிக்கு வந்த, ஆரணி எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத்திடம் பேரூராட்சி மன்றத் தலைவா் ராணி சண்முகம் தலைமையிலான உறுப்பினா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், போளூா் ரயில் நிலையத்தில் திருப்பதி-மன்னாா்குடி ரயில், ராமேசுவரம் விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில், புருலீயா விரைவு ரயில் ஆகிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போளூா் வழியாக வாரத்தில் 3 நாள்கள் செல்லும் மும்பை - தாகூா் ரயிலை தினசரி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா்-வேலூா் காண்டோன்மென்ட் ரயிலை போளூா் வழியில் தினசரி இயக்கவேண்டும்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு இயக்கப்பட்ட ரயிலை தினசரி இயக்க வேண்டும். போளூரில் கணினி முன்பதிவு மையம் அமைக்க வேண்டும்.
போளூா் தபால் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும். போளூா் - வேலூா் வழித் தடத்தில் பயணிகள் நிழல்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மல்லிகா கிருஷ்ணமூா்த்தி, ரங்கதுரை, சிவசங்கா், சாந்தி ஏழுமலை, ஜோதி குமரன், சீதாலட்சுமி பாா்த்திபன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஆசைதம்பி, மாவட்ட முன்னாள் பொருளாளா் சத்தியன், வட்டார காங்கிரஸ் தலைவா் பெரியகரம் ஏழுமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.