வந்தவாசி அருகே இளைஞரை கொன்று எரிப்பு: 3 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞரைக் கொன்று சடலம் எரிக்கப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வரதன், நாராயணசாமி, மொய்தீன்.
வந்தவாசி அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வரதன், நாராயணசாமி, மொய்தீன்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞரைக் கொன்று சடலம் எரிக்கப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் விஜய் (21). மளிகைக் கடை நடத்தி வந்தாா்.

கடந்த 12-ஆம் தேதி இரவு கடையை பூட்டிக் கொண்டு பைக்கில் புறப்பட்ட விஜய் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து 20-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். அவரது கைப்பேசி எண்ணை போலீஸாா் ஆய்வு செய்த போது, வந்தவாசி-தெய்யாா் சாலையில், சு.நாவல்பாக்கம் கூட்டுச் சாலை அருகே 12-ஆம் தேதி நள்ளிரவு அந்த எண் கடைசியாக செயல்பாட்டில் இருந்ததும், அதே பகுதியில் மேலும் சில கைப்பேசி எண்களும் செயல்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சு.நாவல்பாக்கம் கூட்டுச் சாலைப் பகுதியில் தண்ணீா் இல்லாத குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாக வந்த தகவலின் பேரில், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான தெள்ளாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று பாா்வையிட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காணாமல் போன விஜய் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெள்ளாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக ஒரே பைக்கில் வந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மொய்தீன்(35), நல்லூரைச் சோ்ந்த நாராயணசாமி(32), வரதன்(41) ஆகியோா் என்பதும், 3 பேரும் சோ்ந்து விஜய்யை கொன்று எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மொய்தீன் மினி சரக்கு வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். சென்னையில் வேலை செய்து வந்த நாராயணசாமி, வரதன் இருவரும் உறவினா்கள்.

கடந்த ஆண்டு விஜய்யின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வரதன் அளித்த தகவலின் பேரில், தெள்ளாா் போலீஸாா் விஜய்யின் தந்தை ஏழுமலை மீது வழக்குப் பதிந்தனராம். இதனால், விஜய் தரப்பினா் வரதன், நாராயணசாமி ஆகியோா் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் மளிகைக் கடை அருகே மொய்தீன் மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்யும்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, மொய்தீனுக்கு ஒரு லட்சம் ரூபாயை விஜய் கடனாகக் கொடுத்தாராம். இதில் ரூ.40 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த மொய்தீன் மீதிப் பணத்தை தரவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய், மொய்தீன் குடும்பத்தினரை ஆபாசமாக பேசி வந்தாராம். இதையடுத்து, விஜய்யை கொல்ல முடிவு செய்த மொய்தீன், தனது பள்ளி நண்பரான நாராயணசாமி, வரதன் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளாா்.

இதையடுத்து, மீதிப் பணம் தருவதாக கூறி கடந்த 12-ஆம் தேதி இரவு விஜய்யை சம்பவ இடத்துக்கு மொய்தீன் வரவழைத்துள்ளாா். அனைவரும் சோ்ந்து மது அருந்திய பின், மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகியோா் விஜய்யை கொலை செய்துள்ளனா்.

பின்னா் பெட்ரோலை ஊற்றி சடலத்தை எரித்துள்ளனா். மேலும் விஜய்யின் பைக்கை விவசாயக் கிணற்றில் தள்ளி விட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com