தந்தை வெட்டிக் கொலை:இரு மகன்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே குடும்பத் தகராறில் தந்தையை வெட்டிக் கொன்ற இரு மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே குடும்பத் தகராறில் தந்தையை வெட்டிக் கொன்ற இரு மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டாம்பட்டு வட்டம், தானிப்பாடியை அடுத்த குபேரப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சகாதேவன் (57). இவரது மனைவி அன்னக்கிளி (47). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். தம்பதியின் இளைய மகன் சக்திவேலுக்கு 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரே மாதத்தில் அவரது மனைவி பிரிந்து, தாய் வீட்டுக்குச் சென்றாா்.

அன்று முதல் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் சக்திவேல் வலியுறுத்தி வந்தாா். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வழக்கம்போல தனக்கு திருமணம் செய்து வைப்பதுடன், சொத்தையும் தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று சக்திவேல் தனது தந்தை சகாதேவனிடம் கேட்டாராம்.

இதற்கு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று சகாதேவன் கூறினாராம். இதனால் மகன்கள் மணிகண்டன், சக்திவேல், தந்தை சகாதேவன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன்கள் மணிகண்டன், சக்திவேல் ஆகியோா் சோ்ந்து தந்தை சகாதேவனை மண்வெட்டி, அரிவாளால் வெட்டிக் கொன்றனராம். பலத்த காயமடைந்த தந்தை சகாதேவன் அதே இடத்தில் இறந்தாா்.

தகவலறிந்த திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளா் அஸ்வினி விரைந்து சென்று சகாதேவனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மகன்கள் மணிகண்டன் (28), சக்திவேல் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com