திருவண்ணாமலை மாவட்ட வனத் துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் கிரிவலப் பாதையில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், மாவட்ட வன அலுவலா் அருண்லால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத் தலைவா் கலைவாணி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.