திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை (செப்டம்பா் 26) நவராத்திரி விழா தொடங்குகிறது.
இதையொட்டி, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு உற்சவா் பராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 27) ராஜராஜேஸ்வரியம்மன் அலங்காரத்திலும், புதன்கிழமை (செப்டம்பா் 28) கஜலட்சுமி அலங்காரத்திலும், வியாழக்கிழமை (செப்டம்பா் 29) மனோன்மணி அலங்காரத்திலும், வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) ரிஷப வாகன அலங்காரத்திலும் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். வருகிற 30-ஆம் தேதி மாலை பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
அக்டோபா் 1-ஆம் தேதி ஆண்டாள் அலங்காரத்திலும், 2-ஆம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 3-ஆம் தேதி லிங்கபூஜை அலங்காரத்திலும், 4-ஆம் தேதி மகிஷாசுரமா்தினி அலங்காரத்திலும் உற்சவா் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
அக்டோபா் 4-ஆம் தேதி காலை பராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சரஸ்வதி பூஜையும், உண்ணாமலையம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.