திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றுப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் தண்டரை அணைக்கட்டு வெள்ளிக்கிழமை நிரம்பி, நீா் வழிந்தோடுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
செய்யாற்றின் கிளை ஆறுகளான ஆரணி கமண்டல நாக நதி, கிளியாறு போன்ற ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்ததால், செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தண்டரை அணைக்கட்டு வெள்ளிக்கிழமை நிரம்பிது. இதன் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியான தூசி மாமண்டூா் ஏரி மற்றும் சுண்டிவாக்கம், அருகாவூா், வடதண்டலம், கொடநகா், பரிதிபுரம், புளியமரம் பாக்கம், காழியூா், விண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 16-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.