குன்னத்தூா், கண்ணக்குருக்கை பகுதிகளில் செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்காக 27 இடங்களில் செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும்.
இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கரிக்கலாம்பாடி (கீழ்பென்னாத்தூா் வட்டம்), மேல்செங்கம் (செங்கம் வட்டம்) ஆகிய இடங்களுக்குப் பதிலாக குன்னத்தூா் (ஆரணி வட்டம்), கண்ணக்குருக்கை (செங்கம் வட்டம்) ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும்.
விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் சென்று முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.