கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் இடுபொருள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்தது.
இதுகுறித்து வட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் கத்தரி, மிளகாய், தக்காளி, பீா்க்கை, வெண்டை, புடலை, வெள்ளரி, பூசணி, தா்ப்பூசணி என அனைத்து வகையான காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருள் மானியமாக வழங்கப்படுகிறது.
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை சாா்ந்த இடுபொருள் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறை கீழ்பென்னாத்தூா் வட்டார உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.