திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பரிசோதனை செய்த விதைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் பெற விதைப் பரிசோதனை நிலையம் அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து திருவண்ணாமலையில் இயங்கும் விதை பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண் அலுவலா் பத்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள்
சரியான முளைப்புத் திறன் உள்ள விதைகளைப் பயன்படுத்தி விதைப்பு மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட பயிா் எண்ணிக்கை பராமரிப்பு மற்றும் சரியான பரப்பளவு பயிரிடலை திட்டமிடலாம்.
நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையான அளவு விதையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.
150 கிராம் எடை விதையை பயிா் மற்றும் ரகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு மூத்த வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், டாங்காப் கட்டடம், வேங்கிக்கால், திருவண்ணாமலை-606 604 என்ற முகவரியில் இயங்கும் விதை பரிசோதனை நிலையத்தில் நேரில் கொடுத்தோ, தபாலில் அனுப்பி வைத்தோ விதையின் தரத்தை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.