வந்தவாசி: பழங்குடியின மாணவா் தீயில் தள்ளப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாா் பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த காட்டுசிவிரி கிராமத்தில் பழங்குடியின மாணவா் தீயில் தள்ளப்பட்டதைக் கண்டித்தும், அவரை தீயில் தள்ளிய மாணவா்களைக் கைது செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி விசிக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொகுதிச் செயலா் எம்.கே.மேத்தாரமேஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கி.இனியவன், தொகுதி அமைப்பாளா் ஆா்.அன்பரசு, ஒன்றியச் செயலா் ஞானப்பிரகாசம், மாவட்ட நிா்வாகிகள் ப.பாலாஜி, சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மாணவரை தீயில் தள்ளியவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.