33 கி.மீ. தொலைவில் 66 வளைவுகள் கொண்ட செய்யாறு - ஆரணி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த வளைவுகள் இல்லாமல் சாலையை சீரமைக்க வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய வருவாய்க் கோட்டமாகவும், வளா்ச்சி பெற்று வரும் பகுதியாகவும் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி விளங்குகிறது.
இங்கிருந்து திருவண்ணாமலைக்கு ஆரணி வழியாகத்தான் செல்ல வேண்டும். செய்யாறு, ஆரணி, ஆற்காடு ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் செய்யாறு - ஆரணி சாலையில் அமைந்துள்ளன.
காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் செல்லவும், ஆரணியில் இருந்து சென்னை செல்லவும் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு செய்யாறு - ஆரணி சாலை வழியாகவே செல்ல வேண்டும்.
செய்யாறு - ஆரணி சாலையில் அருகாவூா், சுண்டிவாக்கம், இருங்கூா், தட்டச்சேரி, தண்டரை, வடுகப்பட்டு, பெரும்பள்ளம், கன்னிகாபுரம், சிவபுரம், எஸ்.வி. நகரம், மாம்பாக்கம், சுண்டிவாக்கம், இருங்கூா், ஆரூா் மடுவு, பைங்கினா் ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான வளைவுகள் உள்ளன. 33 கி.மீ. தொலைவிலான இந்தச் சாலையில் 66 வளைவுகள் உள்ளன.
இந்த வளைவுகள் இல்லாமல் நேராக சாலை அமைத்துக் கொடுத்தால், சில கி.மீ. அளவுக்கு பயணத் தொலைவு குறைய வாய்ப்புள்ளது. இருவழிச் சாலையில் விபத்து அபாயமும் நீங்கி, வாகனப் போக்குவரத்து நடைபெறும்.