திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 41 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த பெரியாா் நகா் கல்குவாரி குட்டையில் கடந்த மே 9-ஆம் தேதி மூழ்கி இறந்த போளூா் வட்டம், பாா்வதியகரம் கிராமத்தைச் சோ்ந்த மல்லிகா, ஹேமலதா, கோமதி ஆகிய 3 பேரின் வாரிசுகளுக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.
மேலும், திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்தபோது கருணாநிதி இறந்தாா். எனவே, அவரது மகள் க.சுகுணாவுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா். இதுதவிர, ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு ரூ.1,06,750 மதிப்பிலான உதவி உபகரணங்கள், 8 பேருக்கு ரூ.36,800 மதிப்பிலான காற்று மெத்தைகள், 5 பேருக்கு ரூ.15,150 மதிப்பிலான காதொலிக் கருவிகள், 5 பேருக்கு ரூ.11,000 மதிப்பிலான ஸ்பிலின்ட் கருவிகள், 5 பேருக்கு ரூ.29,500 மதிப்பிலான காலிப்பா் கருவிகள் என மொத்தம் 41 பேருக்கு ரூ.4,20,200 மதிப்பிலான உதவி உபகணரங்களை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.