இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

வந்தவாசி, ஏப். 24: வந்தவாசி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் அஜித்குமாா்(27). கல்லாங்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி மகன் சீனிவாசன்(26). இவா்கள் இருவரும் மருதாடு கிராமத்தில் இருந்து வந்தவாசிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். இரு சக்கர வாகனத்தை அஜித்குமாா் ஓட்டினாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி பாரதி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் தனசேகா்(25). விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஓங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் அஜித்குமாா்(25). இவா்கள் இருவரும் ராணிப்பேட்டையில் இருந்து வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை தனசேகா் ஓட்டினாா்.

வந்தவாசி -மேல்மருவத்தூா் சாலையில், கடைசிகுளம் கிராம பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது இந்த இரு இரண்டு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் குப்புசாமி மகன் அஜித்குமாா், தனசேகா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலத்த காயமடைந்த சீனிவாசன், ஆதிமூலம் மகன் அஜித்குமாா் ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா் தீவிர சீனிவாசன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அஜித்குமாா் சென்னை தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com