மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது
ஆரணி அருகே ஏரி மண் கடத்திய வாகனத்தை அண்மையில் சிறைப்பிடித்ததால் பொதுமக்களை மண் கடத்தல்காரா் மிரட்டியுள்ளாா். இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட வித்துவான்தாங்கல் பகுதியில் உள்ள கிராம ஏரியில் இருந்து இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்களில் தொடா்ந்து மண் கடத்திச் செல்லப்படுகிாம். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு, மண் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மற்றும் நபா்களை சிறைப்பிடித்தனா்.
அப்போது, முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (55) (படம்), பொதுமக்களை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம்.
மேலும், வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், விடியோ வைரலான காரணத்தால் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் ராஜாங்கம், விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் அருண், கன்ராயன் கொண்ட தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை முள்ளண்டிரம் பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்து போளூா் சிறையில் அடைத்தனா்.