சோளிங்கரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாண்டியநல்லூர் விவசாய சங்கத் தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிராம பகுதிகளில் வழங்கும் வேலைவாய்ப்பினை பேரூராட்சி பகுதியில் இருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும், இதில் வழங்கும் கூலியை உயர்த்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன் மற்றும் நிர்வாகிகள் எல்.சி.மணி, பாபு மற்றும் சோளிங்கர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.