வேலூரில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 474 மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 474 மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விக்டர் என்பவருக்கு காதொலிக் கருவி வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.