திருப்பத்தூர் அருகே பைக் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலத்தில் வசிப்பவர் விஜயகுமார் (35). இவர், செவ்வாய்க்கிழமை சி.கே.ஆசிரமம் பகுதியில் உள்ள கடைக்கு வெளியே தனது பைக்கை நிறுத்திச் சென்றார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் விஜயகுமாரின் பைக்கின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று மர்ம நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், சின்னகண்ணாலப்பட்டியைச் சேர்ந்த கலைவாணன் (41) என்பதும், இவர் பல இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.