ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
கோயில் பீடாதிபதி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், மகா யாகம் தொடங்கியது. தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் மிளகாய் வற்றல், வெண்கடுகு, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு உலக நன்மை மற்றும் மழை வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.