குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் 50 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் எம். கஜேந்திரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வட்டாட்சியர் பி.எஸ். கோபி வரவேற்றார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் எஸ். சுமதி, தனி வட்டாட்சியர் மகாலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் எத்திராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ரமேஷ், ஜீவரத்தினம், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எலவம்பட்டி ஊராட்சியில்...
திருப்பத்தூர் அருகே கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, தனித் துணை ஆட்சியர் சி.பேபி இந்திரா தலைமை வகித்தார். வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி, தனி வட்டாட்சியர் ஆர்.செண்பகவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
இதில், 14 பேருக்கு வீட்டுமனை பட்டா, 5 பேருக்கு சிறு, குறு விவசாயி சான்று, 2 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 2 பேருக்கு வாரிசு சான்றிதழ், 8 பேருக்கு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.