சுட்டுபிடிக்க உத்தரவிடப்பட்ட ரெளடி வசூர் ராஜா உள்பட 3 பேர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
வேலூரில் ரெளடி வசூர் ராஜா (33) மற்றும் அவரது கூட்டாளிகளான சத்துவாச்சாரியைச் சேர்ந்த வீரமணி (26), ரங்காபுரத்தைச் சேர்ந்த யோகேஷ் (26) ஆகியோர் மீது வேலூர் நகரம், கிராமியம், விரிஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரெளடி வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக இருந்தனர். மேலும், அவர்களின் குற்றச்செயல்கள் தொடர்ந்ததால் அவர்களைச் சுட்டுப்பிடிக்க எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ரெளடி வசூர் ராஜா தனது கூட்டாளிகள் வீரமணி, யோகேஷ் ஆகியோருடன் திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் மன்றம் 2-இல் நீதிபதி சுமிதா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் சரணடைந்தார்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் மாலை 5 மணியளவில் காவல் ஆய்வாளர் பழனி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புதன்கிழமை (மார்ச் 14) காலை 10 மணிக்கு வேலூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.