மத்திய அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 78 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசின் மீதான ரஃபேல் விமான பேர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் செல்ல வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை திரண்டனர். ஆனால், இந்த ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
எனினும், காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென் றனர். காகிதப்பட்டறை அருகே சென்றபோது ஊர்வலம் சென்றவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.
இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் விஷ்ணுபிரசாத், முனிரத்தினம், மேற்கு மாவட்டத் தலைவர் பிரபு, கிழக்கு மாவட்டத் தலைவர் பாச்சாசரம், சோளிங்கர் நகரத் தலைவர் கோபால், அரக்கோணம் நகரத் தலைவர் துரைசீனிவாசன் உள்ளிட்ட 78 பேரை போலீஸார் கைது செய்தனர்.