ராணிப்பேட்டை பாலாற்றில் மணல் கடத்ததில் ஈடுபடுத்தப்பட்டதாக டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் பறிமுதல் செய்தார்.
ராணிப்பேட்டை பாலாற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்
பேரில் வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் தலைமையில் மண்டலத் துணை வட்டாட்சியர் ஆனந்தன், வருவாய் அலுவலர் விஜயசேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பாலாற்றுக்கு விரைந்து சென்றனர்.
ராணிப்பேட்டை பாலாற்றுப்படுகை பகுதிகளான மகாவீர் நகர், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அப்போது, வருவாய்த் துறையினரைக் கண்டதும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.