காங்கிரஸார் வேலூரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, தன்னை இழிவுபடுத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சோளிங்கர் நகர காங்கிரஸ் தலைவர் டி.கோபால் வேலூர் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:
இந்திய அரசு ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து காங்கிரஸ் சார்பில் கடந்த 11-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றோம். அப்போது, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.எம்.முனிரத்தினத்தை குண்டுகட்டாக தூக்கி காவல் துறை வாகனத்தில் போலீஸார் ஏற்றினர்.
வாய் வார்த்தையாகக் கூறினாலே அவர், அந்த காவல் வாகனத்தில் ஏற தயாராக இருந்த நிலையில், அவரை குண்டுக்கட்டாக தூக்கி ஏற்றியது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வடக்கு காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் கேட்டதற்கு, பொது இடம் என்றும் பாராமல், என்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், கைகளால் அடித்தும், என்னுடைய ஆடைகளைக் கிழித்தும், களைந்தும் காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.
இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். மேலும் இந்தச் செய்தி தினசரிகளில் வெளியாகி எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
எனவே இந்த மனுவை விசாரித்து வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இம்மனுவின் நகல்கள், தமிழ்நாடு வடக்கு மண்டல ஐ.ஜி.க்கும், வேலூர் சரக டிஐஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளன.