ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தில் 6 வழிச் சாலையில் தடுப்பு வேலி அமைக்க கிராம மக்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தடுப்பு வேலிகள் விபத்து ஏற்படும்போது சேதமடைந்து அகற்றப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க அவ்விடத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்தச் சாலையை பொதுமக்கள் கடந்து செல்வது மட்டுமன்றி இருசக்கர வாகனங்கள் செல்ல ஏதுவாக அந்த இடத்தில் சிமென்ட் கான்கிரீட் சாய்வு தளம் ஏற்படுத்தியுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் சென்றது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, விபத்துப் பகுதியாக அந்த இடம் உள்ளதாகவும், சாலையை வாகனங்கள் குறுக்கே கடப்பதால் விபத்து ஏற்படுவதாகவும் கூறி அந்த இடத்தை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த இடத்தை இரும்புத் தடுப்பு வைத்து மூடுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பணியாட்கள் அங்கு சென்றனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் பணியாளர்களைத் தடுத்து இரும்புத் தடுப்பு வைத்து மூடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையைக் கடக்க சுமார் ஒரு கி.மீ. தூரம் சென்று வர வேண்டியுள்ளதால் தடுப்புவேலி அமைக்க கூடாது எனக் கூறினர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆம்பூர் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தெரிவித்து அதற்கு தீர்வு காண வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.