மின் கம்பத்தில் சொகுசு பேருந்து மோதல்: 37 பேர் காயம்
ராணிப்பேட்டை அருகே ஆந்திர மாநில அரசு சொகுசு பேருந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 37 பயணிகள் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் இருந்து சென்னை நோக்கி ஆந்திர மாநில அரசு சொகுசு பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. ராணிப்பேட்டையை அடுத்து காரை இணைப்புச் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்த சாலையோர மின் கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின் கம்பம் பேருந்தின் மீது விழுந்ததில் சொகுசு பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
இதில், பேருந்தில் பயணித்த 37 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், உடனடியாக பேருந்தில் இருந்து கிழே இறங்கினர்.
தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேதமடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் வந்து சீரமைத்தனர்.