பச்சூர் சென்றாயசுவாமி கோயிலில் நடைபெறவிருந்த ஏலம் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் பழைமைவாய்ந்த சென்றாயசுவாமி கோயில் இந்து சமய அறைநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் பரம்பரை பூசாரி குடும்பத்தினருக்கும், 58 கிராம மக்களுக்கும் இடையே கோயிலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சில ஆண்டுகளாக பூசல் இருந்து வருகிறது. இந்நிலையில், 2018-19-ஆம் ஆண்டில் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடனான காணிக்கை முடியை ஏலம் கோரும் உரிமை, கோயில் வளாகத்தில் திருப்பத்தூர் இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளர் துரைசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலம் வருவாயில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதற்கான வரவு, செலவுக் கணக்கை தெரிவிக்குமாறும், அதிகாரிகளிடம் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோயில் அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் பேசியதால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாட்டறம்பள்ளி உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, மணி ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தி, 6 பேர் பங்கேற்றனர்.
ஆனால் யாரும் ஏலம் கேட்காததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்திவைப்பதாக ஆய்வாளர் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் துரைசாமி அறிவித்தார்.
அப்போது ஆவேசமடைந்த கிராம மக்கள், கடந்த சில ஆண்டுகளாக சென்றாயசுவாமி கோயிலின் வரவு, செலவுக் கணக்குகளை தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டும் உரிய பதில் அளிக்காதது ஏன் எனக் கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.