ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
நாட்டறம்பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சாமராஜ் (70). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலின் தர்மகர்த்தாவாகவும் உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவருகே வைத்துவிட்டு வீட்டின் எதிரே உள்ள மற்றொரு வீட்டில் சாமராஜ் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1 மணிக்கு வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே இரும்புப் பெட்டியில் வைத்திருந்த 10 பவுன் நகை, காளியம்மன் கோயில் அம்மன் கிரீடம், வெள்ளிப் பொருள்கள், மற்றொரு இரும்புப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.