குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
பொருளாளர் எம்.டி.சதானந்தம் வரவேற்றார். தலைவர் எஸ்.அசோக்குமார், முன்னாள் தலைவர் பி.என்.மாணிக்கம், நிர்வாகிகள் ஜி.வீரய்யபத்தர், எம்.எம்.சிவஞானம், வாசு உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஞாயிறுதோறும் நடைபெறும் வார வழிபாடு, தமிழ் மாதம் முதல் தேதியில் இல்லங்கள்தோறும் நடைபெறும் திருமுறை இன்னிசை, பௌர்ணமி தோறும் நடைபெறும் திருமுறைச் சொற்பொழிவு ஆகியவற்றை மேலும் சிறப்பாக நடந்த ஆவன செய்தல், மாணவர்களைக் கொண்டு கோயில்கள்தோறும் இலவச திருமுறை பயிற்சி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.