அரியூர் அருகே இருந்த கால்நடை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
வேலூரை அடுத்த அரியூர் விசுவநாதன் நகரில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனையால் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன் பெற்று வந்தனர். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன் அந்தக் கால்நடை மருத்துவமனை சின்னுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனால், விசுவநாதன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 1 கி.மீ தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்கெனவே இருந்த இடத்திலேயே கால்நடை மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அரியூர் விசுவநாதன் நகர், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஏடிஎஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், போராட்டம் கைவிடப்படாததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அப்போது, பொதுமக்கள் தங்களது கால்நடைகளையும் போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே, கால்நடை மருத்துவ அதிகாரிகள் மீண்டும் விசுவநாதன் நகரில் கால்நடை மருத்துவமனையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.