நாட்டறம்பள்ளி அருகே விநாயகர் சிலைகள் விசர்ஜனம் (கரைப்பு) செய்யப்படும் ஏரியில் வட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழை (செப்டம்பர் 13) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி கள்ளுக்குட்டை ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
இப்பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி அதில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. இப்பணியை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் நிசார் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸார் உடனிருந்தனர்.