வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரியை ஏமாற்றி ரூ.10.50 லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டை வட்டம், திருப்பாற்கடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (48). பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். அப்போது, அறிமுகமான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குமரேசன், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாபுவிடம் சில தவணைகளில் ரூ. 10.50 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கித் தராததுடன், பணத்தைத் திருப்பி அளிக்காமலும் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பாபு, வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதில், மோசடியில் ஈடுபட்ட குமரேசன் மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.