நாட்டறம்பள்ளி அருகே பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி கிராம மக்கள் புதன்கிழமை தெருவில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெலகல்நத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் கூட்டுறவு நில குடியேற்றச் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீடு மற்றும் நிலங்களுக்கு தனிப்பட்டா இல்லாததால் அரசின் எந்த சலுகையும் பெற முடியவில்லை. இதனால் கூட்டுறவு நில குடியேற்றச் சங்கத்தின் பெயரில் உள்ள பட்டாவை குடியிருக்கும் தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து தரவேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் மனு அளித்தனர். இதையடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் கூறி 3 ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம மக்கள் பட்டா வழங்கும் வரை தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி தெருவில் 50-க்கும் மேற்பட்ட கருப்புக் கொடிகளை புதன்கிழமை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.