வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த காங்கிரஸ், திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.04 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெமிலியை அடுத்த மூலப்பட்டு கிராமத்தில் சிலர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோளிங்கர் பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் பழனிராஜன் தலைமையிலான குழுவினர் அக்கிராமத்துக்குச் சென்று பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த காங்கிரûஸச் சேர்ந்த நெமிலி பேரூராட்சி முன்னாள் தலைவர் வினோபா (62), திமுகவைச் சேர்ந்த ரமேஷ் (49) ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ. 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இருவரும் நெமிலி வட்டாட்சியர் சதீஷ் முன்னிலையில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லியிடம் ஒப்படைக்கப்பட்டனர். உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்படி வட்டாட்சியர் சதீஷ், இருவர் மீது நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.