காஞ்சிபுரம் செல்லும் வழியில் அரக்கோணம் வந்த முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவுக்கு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத்தளத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, அவரது மகனும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான குமாரசாமி குடும்பத்தினர் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிப்பதற்காக பெங்களூரில் இருந்து விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை காலை அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்துக்கு வந்தனர். அவரை வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார் மலர்செண்டு கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் அதிகாரி ஜோக்லேக்கர் தலைமையிலான விமானதள அலுவலர்களும் வரவேற்றனர்.
தொடர்ந்து தேவெ கெளடா மற்றும் குமாரசாமி குடும்பத்தினர் காரில் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். தரிசனத்துக்குப் பிறகு அரக்கோணம் திரும்பிய அவர்கள் விமானம் மூலம் பெங்களூரு திரும்பினர்.
தேவெ கெளடாவின் வருகையையொட்டி, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளப் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.