பேர்ணாம்பட்டு அருகே தலைமையாசிரியை மீதான புகார் தொடர்பாக வட்டாரக் கல்வி அலுவலர் புதன்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
பெரியதாமல்செருவு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமையாசிரியை மகாலட்சுமி உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது இப்பள்ளி வாக்குப் பதிவு மையமாக செயல்பட்டது. வாக்குப் பதிவுக்கு வந்த அலுவலர்கள், கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, 6-ஆம் தேதி பள்ளிக்கு வந்த தலைமையாசிரியை மகாலட்சுமி, கழிப்பறையில் இருந்த பிளாஸ்டிக் பொருள்கள் காணாமல்போனது குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினாராம். அப்போது அவர் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், சில மாணவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர்கள் பேர்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர் கோவிந்தராஜியிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கோவிந்தராஜி புதன்கிழமை பள்ளிக்கு வந்து தலைமையாசிரியை, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்புவதாகக் கூறி விட்டு அவர் சென்றார்.