அரக்கோணம் அருகே சரக்குவேன் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பள்ளி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதில் பயணித்த 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை அருகே ராமாபுரம் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சிலர் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சரக்கு வேனில் வந்துள்ளனர். அப்போது, துக்க வீட்டிற்கு அருகே வசித்தவர்களின் குழந்தைகள் சிலர் அந்த சரக்கு வேனில் தங்களை ஏற்றிக்கொண்டு கிராமத்தை சுற்றிவருமாறு வேன் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர்.
மது அருந்திய நிலையில் இருந்த வேன் ஓட்டுநர் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார். ஒரு திருப்பத்தில் வேன் திரும்பும்போது, நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ராமாபுரத்தை சேர்ந்த ராமதாஸின் மகள் சக்தி(11) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வேனில் இருந்த ராமாபுரத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகள் மேனகா(10), ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் திவாகர்(7), ராமாபுரத்தை சேர்ந்த சரவணன் மகன் திவாகர்(13), மோகன் மகன் மகேஷ்(12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.