வேலூர் அருகே என்ஜின் கோளாறு காரணமாக பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால், பெங்களூரு - சென்னை மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில் புதன்கிழமை அரக்கோணம் நோக்கி வந்தது. திருவலம் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாலை 4.30 மணியளவில் வேலூர் மாவட்டம், திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அரக்கோணத்திலிருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு, 6.30 மணியளவில் ரயில் இயக்கப்பட்டது.
இதன் காரணமாக, பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்ற அனைத்து ரயில்களும் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதன்படி, பெங்களூரு - சென்னை செல்லும் டபுள்டக்கர் ரயில் காட்பாடி ரயில் நிலைத்திலும், வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரயில் சேவூர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.