காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ விவேகானந்தா வித்யாலய பள்ளிகள் சார்பில் புறவழிச்சாலை மற்றும் ஏ-கஸ்பா ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் மௌன ஊர்வலம் சென்றனர். ஆம்பூர் பஜார் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திடலில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதையடுத்து வீர மரணமடைந்த வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சூரியமூர்த்தி, ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் பார் அசோசியேஷன் சார்பில் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு, நகரத் தலைவர் சரவணன், மாவட்டப் பொருளாளர் கொத்தூர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காட்டில்..
வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலர் கே.ஓ.நிஷாத் அஹமது, மகிளா காங்கிரஸ் தலைவர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.ஏ. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.