ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வேலூரில் வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேதாஜி மார்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வேலூர் அனைத்து வணிகர் சங்கச் செயலர் ஆர்.பி.ஞானவேலு தலைமை வகித்தார். தொடர்ந்து, வீரமரணமடைந்த வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவியும், 2 நிமிடம் மௌன அஞ்சலியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் பாபு அசோகன், ஏ.சி.என்.அருண்பிரசாத் உள்பட வணிகர்கள் பலர் பங்கேற்றனர்.
இதேபோல், வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, இம்ப்காப்ஸ் நிறுவன இயக்குநர் கே.பி.அருச்சுனன் தலைமை வகித்தார். இதில், இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் ஐயம்பிள்ளை, பாஜக நிர்வாகி இளநீர் சத்யா, மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்று, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.