மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்துக்கு வெப் ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசுத் துறைகளின் பல்வேறு பொதுத் தகவல்கள், திட்டங்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை வேலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான ஸ்ங்ப்ப்ர்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த இணையதளத்தில் மாவட்டத்தின் முழுமையான தகவல்கள், வரலாற்று தகவல்கள், அனைத்துத் துறைகளின் தகவல்கள், மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள், பண்டைக்கால வரலாற்றுச் சின்னங்கள், மன்னர்கள் ஆட்சிபுரிந்த இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ், ஆங்கில மொழிகளில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அத்துடன், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசியப் பேரிடர் மேலாண்மைத் துறை, அரசு அலுவலர்களின் தொலைபேசி எண்கள், ஒவ்வொரு அரசுத் துறையின் அறிவிப்புகள், செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள், செயல்பாடுகள், புள்ளி விவரங்கள் ஆகியவையும் இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த இணையதளச் சேவையை வேலூர் மாவட்டம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மாவட்டத்தின் வரலாற்றுத் தகவல்கள், அரசுத் துறைகளின் தகவல்களை உடனுக்குடன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வருவதற்காக வேலூர் மாவட்டத்துக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வெப் ரத்னா' தங்க விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் உள்ள ஹேபிடேட் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்று, வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் வெப் ரத்னா' தங்க விருது, சான்றிதழை வழங்கிப் பாராட்டினார். அப்போது, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகச் செயலர் அஜய் சவானி, தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் நீதா வர்மா, துணை இயக்குநர் அல்கா மிஸ்ரா, மாநில தகவல் அலுவலர் சீனிவாசராகவன், மாவட்ட தகவல் அலுவலர் சகாதேவன் ஆகியோரும் உடனிருந்ததாக மாவட்ட இணை தகவல் அலுவலர் அ.ஹரிஹரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
மற்ற எந்த மாவட்ட இணையதளத்திலும் இல்லாத அளவுக்கு வேலூர் மாவட்ட இணையதளத்தில் பல்வேறு துறைகளின் தகவல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த மாவட்டத்தில் உள்ள தொல்லியல் நினைவுச் சின்னங்கள், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் முழுமையான அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த அளவுக்கு சுற்றுலாத் தகவல்கள் தேசிய அளவில் வேறு எந்த மாவட்டத்திலும் பதிவு செய்யப்படவில்லை.
இதன்காரணமாக வேலூர் மாவட்டத்துக்கு வெப் ரத்னா' தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது எங்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
மேலும், தகவல் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விடுபட்ட அரசுத் துறைகளின் தகவல்கள், மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவையும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.