வேலூரில் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் உள்பட இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தேடப்பட்ட வந்த 4 பேரில் ஒருவரை தெற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த விநாயகத்தின் மகன் பிரசாத்(20) தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். அவரது உறவினர் ரமேஷ்(30). இருவரும் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் திரையரங்கில் வியாழக்கிழமை அதிகாலை விஸ்வாசம் படம் பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர்வது தொடர்பாக ரசிகர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பிரதாப் உள்பட 4 பேர் சேர்ந்து பிரசாத், ரமேஷ் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த பிரசாத், ரமேஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் பிரதாப் உள்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர்களை கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடர்புடைய காகிதப்பட்டறையைச் சேர்ந்த வெங்கட்ராமன்(29) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரதாப் உள்ளிட்ட மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.