இயற்கை விளைபொருள்கள் விற்பனை அங்காடி வேலூரில் திறக்கப்பட்டது.
நஞ்சில்லா இயற்கை விளை பொருள்கள் விற்பனை அங்காடி என்ற பெயரில் வேலூர் அண்ணா நகர், அமிர்தம் இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த அங்காடியில், செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருள்கள், எண்ணெய் ரகங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.
இதன் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து இயற்கை வேளாண்மை இயக்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் கோ.புருஷோத்தமன் பேசியது: நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதாகக் கூறி 300 மடங்கு அளவு நஞ்சான பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 0.0003 மில்லி கிராம் பூச்சிக்கொல்லியை உண்கின்றனர். இவற்றால் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் புற்றுநோயால் இறக்க நேரிடுகிறது. இயற்கை உணவால் புற்றுநோயைத் தடுக்க முடியும் என மக்கள் நம்புகின்றனர் என்றார்.