ஆம்பூர் அருகே வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் இறந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு மினி லாரியில் காளைகளை ஏற்றிக் கொண்டு வாணியம்பாடி அருகே பெரியகுரும்பர் தெருவில் நடந்த எருதுவிடும் திருவிழாவுக்குச் சென்றனர். லாரியை கோவிந்தராஜ் ஓட்டிச் சென்றார். எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்ற பிறகு லத்தேரி திரும்பினர்.
ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில் லத்தேரி பகுதியைச் சேர்ந்த பிருத்திவிராஜா (25), அருண் (24) ஆகிய இருவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும், சஞ்சய்குமார், சீனிவாசன், சக்திவேல், குணசேகரன், கோகுல், முருகன், அறிவு, ஜெகதீஷ், பாலாஜி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.