சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் மாவட்ட அளவில் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கலை, விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்றன.
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 17 கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் வாணியம்பாடி எஸ்.ஆர்.எம். கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். பெண்களுக்கான பிரிவில் வேலூர் ஆக்ஸீலியம் கல்வியியல் கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் இயக்குநர் ர.நடராசன், உடற்கல்வி இயக்குநர் ஆர்.ரஞ்சிதம், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் எ.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.